ஈரோடு, மே 26: ஈரோடு மாவட்டத்தில் கார் பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை, விதைகளின் முளைப்புத் திறன் அறிந்து சாகுபடி செய்யுமாறு விதைப் பரிசோதனை நிலைய அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு விதைப் பரிசோதனை நிலைய அலுவலர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விதையைப் பொருத்தே விளைச்சல் இருக்கும் என்பதால் விதையின் தரம், முளைப்பு திறன், புறத்தூய்மை கொண்ட விதையைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும். நடப்பு வைகாசி கார் பருவத்தில் விதைப்பு மேற்கொள்ள உள்ள நெல், பயறு வகை பயிரிடும் விவசாயிகள், விதைப்புக்குத் தயாராக வைத்துள்ள விதைகளைப் பரிசோதனை செய்வது அவசியம்.ஈரோடு மாவட்டத்தில் கார் பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களான ஏ.எஸ்.டீ. 16, ஏ.டீ.டி. 36, ஐ.ஆர். 50, எம்.டி.யூ. 5, ஏ.டீ.டி. 43, கோ-47, ஏ.டீ.டி.(ஆர்) 47, சி.ஓ.ஆர்.எச். 3 போன்ற விதைகள் இருப்பு வைத்துள்ளவர்கள் அவற்றின் முளைப்புத் திறன், ஈரப்பதம் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து விதைக்க வேண்டும். இதன் மூலமாகவே அதிக விளைச்சலுடன் லாபம் பெற முடியும்.