சிவகங்கை, மே 25: சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் வழியாக தேவகோட்டைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் வழியே தேவகோட்டை செல்லும் வழித்தடம் இப்பகுதியின் முக்கியமான வழித்தடம் ஆகும். சிவகங்கையில் இருந்து சருகணிவரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று பிறகு தேவகோட்டைக்கு தனியாக சாலை பிரிகிறது. முக்கியமான இவ்வழித்தடத்தில் சிவகங்கையில் இருந்து தேவகோட்டை வரை செல்லும் டவுன்பஸ் ஒன்றும் தேவகோட்டையில் இருந்து காளையார்கோவில், சிவகங்கை வழியே மானாமதுரை செல்லும் ரூட் பஸ் ஒன்று மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காளையார்கோவிலில் இருந்து தேவகோட்டைக்கு ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தமக்கள் இந்த பஸ்களை மட்டுமே நம்பி உள்ளனர். குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுவதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த பஸ்களில் அதிகப்படியான கூட்டங்கள் உள்ளதால் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பெண்கள் கடும் சிரமம் அடைகின்றனர். இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.