மதுரை, மே 25: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 7 மற்றும் குரூப் 8 தேர்வு மூலம், இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 78 செயல் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் 7 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 கடைசி நாளாகும். இதில் 42 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பாகும். எழுத்துத்தேர்வு செப். 10ல் நடக்கிறது. குரூப் 7 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 18 கடைசி நாளாகும். காலியிடங்கள் 36 உள்ளன. கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சியாகும். எழுத்துத்தேர்வு செப்டம்பர் 11ல் நடைபெறும்.
இத்தேர்வுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணபிக்க வேண்டும். மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்கள் மூலம் போட்டி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட கால வெளிஇடையில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகளுக்கு தேவையான பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் உருவாக்கப்பட்ட https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் மையத்தில் செயல்படும் நூலகத்தில், அனைத்து போட்டி தேர்வுகளுக்கும், மாணவர்கள் தங்களை தயார்படுத்தும் வகையில் ஏராளமான புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. எனவே, பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 1 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 7 மற்றும் 8 தேர்வு விண்ணப்பித்த படிவத்தின் நகலுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.