மதுரை, மே 25:மதுரையில் எம்ஆர்டிடி என்ற நிதி நிறுவனத்தினர் ஏராளமானோரிடம் முதலீடுகளை வசூலித்துள்ளனர். உறுதியளித்த படி டெபாசிட்தாரர்களுக்கு முதிர்வு தொகை திருப்பி தராமல் பல கோடி மோசடி நடந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன மேலாளர் ஆனந்தன்(எ)ஆனந்த், தனக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி பிறப்பித்த உத்தரவு: கடந்த 2016ல் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை விசாரணை நிலுவையில் உள்ளது. மனுதாரர் மேலாளராக பணியாற்றியதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.விசாரணை போலீசில் தினசரி காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.