ஊட்டி, மே 25: ஊட்டிக்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது மரவியல் பூங்கா.நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல மடங்கு அதிகம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்த நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இந்த சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு விளம்பரங்கள் செய்யப்படும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு செல்கின்றனர். ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் மரவியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்வது மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இங்கு புல் மைதானங்கள், அழகிய மலர்கள் என அழகாக காட்சியளித்த போதிலும், போதிய விளம்பரம் இன்றி இந்த பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்வது முற்றிலும் குறைந்தது.