தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு

கோவை, மே 25: கோவையில் நேற்று தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், குழுவை சேர்ந்த 10 எம்ஏல்ஏக்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு அதன் தலைவர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை உள்ளிட்ட துறைகளின் பணிகளை கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர். அதன் படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள், அரசு சார்பாக மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் அந்த குழுவினர் மக்களிடம் கருத்து கேட்டனர். அவர்களிடம் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கிறது என மக்கள் தெரிவித்தனர். பின்னர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மண்புழு மூலம் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஜி.சி.டி. தடாகம் சாலையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டனர். இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினரும், எம்ஏல்ஏக்களுமான டி.ஆர்.பி ராஜா, அன்பழகன், ஈஸ்வரன், ஏழிலரசன், சிவக்குமார், ராமச்சந்திரன், ராஜ்குமார், சதன் திருமலைக்குமார், அம்மன் கே.அர்ஜூனன், பாலசுப்பிரமணியன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றி செல்வன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி துணை கமிஷனர் சர்மிளா, கவுன்சிலர்கள் அழகு ஜெயபாலன், கார்த்திக் செல்வராஜ், சந்தோஷ், சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, காங்கிரஸ் நிர்வாகி சோமு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: