ஈரோடு, மே 25: தமிழக அரசு தொலைநோக்கு பார்வையோடு மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்துள்ளதாக விவசாயிகள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணை அட்டவணைப்படி ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நடைமுறையில் உள்ளது. நடப்பாண்டு நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதாலும் கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாகவும், வழக்கமான தேதிக்கு முன்னதாக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணை நிரம்பி உபரிநீர் கடலில் வீணாக கலந்து விடக்கூடாது என்பதற்காக தொலைநோக்கு பார்வையில் சிந்தித்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.