பெண்ணாடம், மே 25: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசெல்வம் (40). அரசு போக்குவரத்து கழகம் விருத்தாசலம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புகழ்செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தம்பதியினர் மற்றும் பிள்ளைகள் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த புகழ்செல்வியை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயின், தோடு, மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். கணவர் மற்றும் பிள்ளைகள் தடுக்க முயன்ற போது கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அவர்களும் பயந்து போய் அப்படியே நின்று விட்டனர். பின்னர் அந்த கும்பல் கொள்ளையடித்த நகைகளுடன் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து தம்பதியினர் இருவரும் சத்தம் போட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது கொள்ளை கும்பல் மாயமாகிவிட்டனர்.