12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர், மே 25: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் வாழ்முனி (19). இவர் 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிக்க சொல்லி அடிக்கடி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 15.3.2021ல், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு வாழ்முனி ஜன்னல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர், வாழ்முனியை கண்டித்துள்ளனர்.

மேலும் இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வாழ்முனியை கைது செய்து, கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், வாழ்முனி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரூ.20 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Related Stories: