நெல்லையில் வெவ்வேறு சம்பவம் வாலிபர் உள்பட 4 பேர் சாவு

கேடிசி நகர், மே 25: நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அடுத்த வைராவிகுளத்தை சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் ஆனந்த்ராஜ் (29). வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்து வந்த இவர், கடந்த 22ம் தேதி மேலப்பாளையம் வந்தார். பின்னர் அங்குள்ள மருந்து கடையில் காய்ச்சல், தலைவலி மாத்திரைகளை வாங்கிய இவர் அளவுக்கு அதிகமாக தின்றதில் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் பாளை திம்மராஜபுரம்- சீவலப்பேரி ரோடு பகுதியை சேர்ந்த முருகன் மனைவி மீனா(65). இவர் குடும்ப பிரச்னை காரணமாக எலி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்றடைப்பு அருகே தோட்டாக்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமியின் மகன் செல்வசுடலை. பொன்னாக்குடி பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி  இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை முன்னீர்பள்ளம் அடுத்த தருவை சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியின் மகன் முருகேசன் (30). பெயிண்டரான இவரும், இவரது நண்பரும் நேற்று முன்தினம் மேலப்பாளையத்திற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் முருகேசன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: