பிச்சை எடுத்து சேர்த்த ரூ.71,000 மூதாட்டியிடம் ஒப்படைப்பு: ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு

செங்கல்பட்டு: மயங்கி கிடந்த மூதாட்டியை சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த ரூ.71 ஆயிரத்தை, பத்திரமாக அவரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் வசிப்பவர் அமுதா (70). பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்  இரவு அமுதா, சாலையோரத்தில் மயங்கிக் கிடந்தார். இதைபார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அமுதா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது, மூதாட்டி அமுதா, பிச்சை எடுத்து பையில் வைத்திருந்த பணம் கீழே விழுந்தது. இதை பார்த்து ஆம்புலன்ஸ் டிரைவர் அன்புராஜ், மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் பணத்தை பாதுகாப்பாக எடுத்து வைத்தனர். அதில், ரூ.71,426 இருந்தது. சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்த மூதாட்டி, தனது பை குறித்து கேட்டுள்ளார். இதையடுத்து பாதுகாப்பாக வைத்திருந்த பணத்தை, டிரைவர் அன்புராஜ், மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் அவரிடம் ஒப்படைத்தனர். மூதாட்டியிடம் பணத்தை ஒப்படைத்த இருவரையும் மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

Related Stories: