வாலாஜாபாத்: வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை முதல்வர் காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார். வேளாண் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதையொட்டி, வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பண்ணை குட்டையின் பயன்பாடுகள், வீட்டு தோட்டம் அமைத்தல், காய்கறி சாகுபடி செய்யும் முறைகள், குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர். ஊராட்சியில் உள்ள 125 விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், 50 பழ மரக்கன்றுகள், 25 தென்னங்கன்றுகள், 15 பேருக்கு தலா 5 கிலோ உளுந்து விதைகள், ஒரு விவசாயிக்கு பூச்சி மருந்து தெளிக்கும் விசை பம்ப் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதில், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏகவல்லி அன்னப்பன், ஜெயச்சந்திரன், விமலா டில்லிபாபு, நாராயணன் அம்பிகா, ராஜன் விமலா, சுரேஷ் கலைவாணி, பெருமாள் சௌந்தரி, குமார் சற்குணம், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.