மும்முனை இணைப்புக்கு லஞ்சம் மின்வாரிய பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

சென்னை:  மும்முனை இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு 4 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ். இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது வீட்டிற்கு மும்முனை இணைப்பு கோரி அதே பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி ₹1000 லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அரிதாஸ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அரிதாஸிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு மறைந்திருந்தனர். அப்போது மணியை கையும் களவுமாக அவரை மடக்கி பிடித்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி வேலரசு குற்றம் நிரூபணமானதால் மின்சார வாரிய உதவி பொறியாளர் மணிக்கு 4ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ₹40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார்.

Related Stories: