பெரம்பூர்: கொளத்தூர் மக்காரம் தோட்டம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கந்தன் (எ) மாரி (28). கட்டுமான பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்தார். இவர், அதே பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் வடிவேலுவிடம் ₹1 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில், ₹65 ஆயிரத்தை திருப்பி செலுத்தி உள்ளார். தொழிலில் நஷ்டம் காரணமாக மீதமுள்ள ₹35 ஆயிரத்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாரியின் கடைக்கு சென்ற வடிவேலு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், ஒரு வாரத்தில் பணத்தை தராவிட்டால் கடையில் இருக்கும் பொருட்களை அள்ளிச் செல்வேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாரி நேற்று முன்தினம் இரவு, தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அதில், கடன் கொடுத்தவர் மிரட்டியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன், என பதிவு செய்து, அதை வாட்ஸ்அப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.