மொடக்குறிச்சி, மே 24: சிவகிரி அடுத்த விளக்கேத்தி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் மாயவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 4வது சனிக்கிழமை மாயவர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது வந்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மிக சிறப்பாக நடைபெறும் அப்பொழுது கோயில் மாடு அலங்கரிக்கப்பட்டு பாத பூஜை செய்யப்பட்டு அன்னதானம் துவக்கி வைக்கப்படும்.கோயிலுக்கு சொந்தமான மாடு கடந்த 22 ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கோயிலுக்கு சொந்தமான மாடு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டது. விளக்கேத்தி ஊராட்சி தலைவர் தங்கராஜ் மற்றும் மற்றும் ஊர் பொதுமக்கள், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று மாட்டிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாடு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஓலப்பாளையம் விநாயகர் திடல் அருகே இதற்கு முன்பு இறந்து போன கோயில் மாடு புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே புதைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மாடு புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.