கபிஸ்தலம் அருகே தேவி மாரியம்மன் கோயில் உற்சவ விழா
பாபநாசம், மே 24: கபிஸ்தலம் அருகே கீழ கபிஸ்தலம் தேவி மாரியம்மன் கோயில் உற்சவ விழா நடந்தது. கபிஸ்தலம் அருகே கீழ கபிஸ்தலம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள தேவி மாரியம்மன் கோயில் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 15ம் தேதி தொடங்கப்பட்டு பூச்சொரிதல் விழா அபிஷேக ஆராதனையுடன் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட வீதியுலா நிகழ்ச்சி காவிரி ஆற்றிலிருந்து தேவி மாரியம்மனுக்கு கரகம், பால்குடம், அலகு காவடி எடுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கரகம், பால்குடம், அலகு காவ எடுத்து வந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அன்னதானமும் நடந்தது. இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் தீபாராதனையும் மங்கல இசை, நையாண்டி மேளம், தப்பாட்டத்துடன் அம்பாள் வீதி உலா காட்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு கிராமவாசிகள், விழாக்குழுவினர், இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.