கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2,55,562 பேர் பயன்

கரூர், மே 21: தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே மருந்து, மாத்திரைகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 2,55,562 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இது குறித்து கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளதாவது:

அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் 1,08.454 நபர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 79,877 நபர்களும், ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் 54,594 நபர்களும், இயன்முறை சிகிச்சையில் 7769 நபர்களும், படுத்த படுக்கையாக உள்ளவர்கள் 5,868 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பணிக்கு 101 இடைநிலை சுகாதார பணியாளர்களும், 194 பெண் சுகாதார பணியாளர்களும், 25 தொற்றா நோய் செவிலியர்களும் என மொத்தம் 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20 நபர்களுக்கு மருந்து, மாத்திரை, இயன்முறை சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார். மேலப்பாளையம் ஊராட்சி பகுதியில் ஆதரவு சிகிச்சை பெற்று வரும் நடேசன் என்பவர் கூறுகையில், நானும், எனது மனைவியும் வயதானவர்கள். படுத்த படுக்கையாக உள்ள எனக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாளர்கள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது என்றார்.

இதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கூறுகையில், கடைசி காலத்தில் என்னை கவனிக்க யாரும் இல்லை. கைகளை நீட்ட முடியாமல் பாதிக்கப்பட்டு இருந்தேன். இந்த நிலையில்தான் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதார பணியாளர்கள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளித்து செல்கின்றனர். இதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Stories: