திண்டிவனம் அருகே குடிபோதையில் பயங்கரம்: மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த தந்தை கைது

திண்டிவனம், மே 21: திண்டிவனம் அருகே மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த அன்னம்பாக்கம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் விநாயகம்(60). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகன் அரிபிரசாத்(27) என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் விநாயகத்தை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் தந்தை, மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவ்வப்போது இருவரும் மது போதையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் தந்தை மகன் இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் அதிக மதுபோதையில் இருந்தபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அரிபிரசாத் சுயநினைவின்றி படுத்தபடியே தந்தையை அசிங்கமாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விநாயகம் வீட்டில் இருந்த அரிவாளால் சுயநினைவின்றி இருந்த அவரது மகனை முகம் மற்றும் தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார். சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அப்போது விநாயகம் அங்கிருந்து தப்பிக்க முயன்றதால் ஊர் பொதுமக்கள் அவரை பிடித்து கட்டிவைத்து, போலீசில் ஒப்படைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து கொலை செய்யப்பட்ட அரிபிரசாத்தின் சகோதரர் ரஞ்சித் செல்வம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விநாயகம் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: