நெல்லிக்குப்பம், மே 21: நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் வாரம் ஒருநாள் குப்பைகளை அகற்றியும், மழைநீர் வடிகால் வாய்கலை சுத்தம் செய்து டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
யாக சிறப்பு கூட்டுப்பணி செய்ய நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உத்தரவின்பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் மண் மேடுகளை அகற்றியும்,
மழைநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி கழிவுநீர் தங்கு தடையில்லாமல் செல்லவும், முட்புதர்களை அகற்றியும் தூய்மை பணி மேற்கொண்டனர். பின்னர் சாலை ஓரங்களில் உள்ள வேலிகளில் படர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். இப்பணியை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நகர மன்ற தலைவர் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க நகர செயலாளர் மணிவண்ணன், அவைத் தலைவர் ஷேக் மொய்தீன், ம.தி.மு.க சங்கர், கவுன்சிலர்கள் ராணி, ஷப்னா பேகம் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.