கலெக்டர் அலுவலகத்தில் சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பாக்கம், சிவலிங்கம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (60). இவரது சகோதரர் ராஜன் (57). இவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் கடம்பத்தூர் ஒன்றியம், நயப்பாக்கம் கிராமத்தில் 30 ஏக்கர் உள்ளது. அந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி சகோதரர்கள் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அவர்கள் மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

இந்நிலையில் நேற்று தங்களது நிலம் ஆக்கிரமிப்பு செய்தது  சம்பந்தமாக ராஜன்,  சகோதரர் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் என 10 க்கும் மேற்பட்டோர்  கலெக்டரிடம் முறையிட வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து  புகார் மனுவை அளித்தனர். ஆனால் அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது சம்பந்தமாக தாசில்தாரிடம் முறையிடுமாறு கூறியுள்ளார். இதனால் தங்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் தீர்வு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில்  கிருஷ்ணன் அவரது சகோதரர் ராஜன் ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் தாங்கள் கொண்டு வந்திருந்த  பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை  2 பேரும் உடலில் ஊற்றி கொண்டனர்.  இதை கண்ட பொதுமக்கள்  அவர்களிடம்  இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை  பறித்து சமாதானம் செய்தனர்.  

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். உடனே திருவள்ளூர் டவுன் போலீசார் வந்து சகோதரர்களிடம்  உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்தனர்.   பூர்வீக சொத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சகோதரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: