இதயத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய வாலிபர்

கோவை, மே 19: கோவை அரசு மருத்துவமனையில் இதயத்தில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாலிபருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் மணிகண்டன் (26). இவர் நெஞ்சில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 25-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதயத்தில் காயங்களும், இதயத்தை சுற்றி ரத்தம் உறைந்த நிலையில் கட்டியாக மாறியிருப்பது தெரியவந்தது.

மேலும், இடது பக்க இதயத்தை அழுத்தியும், இதயத்தின் வேலைபாட்டை குறைந்தும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது உயிரை காப்பாற்றும் வகையில் மருத்துவர்கள் அவருக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சையின்போது அவரின் இதயத்தில் குத்து காயம் இருப்பது தெரியவந்தது. அதிலிருந்து ரத்தம் கசிந்து, இதயத்தை சுற்றிலும் ரத்த கட்டு (சுமார் 1000 மில்லி லிட்டர்) இதயத்தை அழுத்தி கொண்டு இருந்ததால் இதயத்தின் செயல்பாடு குறைந்து இருந்தது. இதனை சரி செய்யும் வகையில் மருத்துவர்கள் ரத்த கட்டை அகற்றினர். மேலும் காயத்தினால் ரத்தம் கசிந்து கொண்டு இருந்த இதய பகுதியையும் தையல் போட்டு சரி செய்தனர்.

அதிகமாக ரத்த கசிவு ஏற்பட்டதினால் மற்ற உடலுறுப்புகளுக்கு, முக்கியமாக சிறுநீரகத்துக்கு செல்ல வேண்டிய ரத்தம் குறைவாக இருந்ததினால் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு பின் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இந்த சிறுநீரக பாதிப்பிற்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, நோயாளி நலமுடன் வீடு திரும்பி உள்ளார். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து நோயாளியின் உயிரை காப்பாற்றிய அவசர சிகிச்சை பிரிவு தலைவர் கருப்பசாமி, இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் சீனிவாசன், இதய அறுவை சிகிச்சைத்துறை உதவி பேராசிரியர்கள் இளவரசன், முகமத் மின்னதுல்லாஹ், அரவிந்த் மற்றும் மயக்கவியல் துறை தலைவர் கல்யாண சுந்தரம் மற்றும் உதவி பேராசிரியர் மதன கோபாலன், சிறுநீரக துறை தலைவர் பிரபாகரன் மற்றும் செவிலியர் பொற்கொடி அடங்கிய மருத்துவ குழுவினர் செய்திருந்தனர். இவர்களை, மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டினார்.

Related Stories: