கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டணமல்லி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள ஐயர்கண்டிகையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவுடைய நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நட்ராஜ், கெட்டணமல்லி ஊராட்சி தலைவர் நதியா ரவி, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், கவரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றி பள்ளி கட்டிடம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், நூலகம், பேருந்து நிறுத்தம், விளையாட்டு மைதானம் போன்ற தேவைகளுக்கு அரசு  இடம் இல்லாமல் அவதிப்படுவதாக கூறினர். பின்னர் கிராம மக்களிடம் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நெற்பயிர் இடத்திற்கு  மட்டும் 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் எனவும் பி.டி.ஓ. நடராஜன் வாக்குறுதி அளித்தார். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: