ஈரோடு, மே 18: ஈரோடு மாவட்டத்தில் 11,890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உத்தரவிட்டுள்ள நிலையில், 932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கொல்லம்பாளையம், நல்லகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்கள் மற்றும் வீடற்ற ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் வகையில், ஒன்றிய அரசின் மானியம் ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.7 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 400 சதுர அடிபரப்பளவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.