சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருச்செங்கோடு, மே 14: மல்லசமுத்திரம் ஒன்றியம், மொரங்கம் கிராமத்தில் 800க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு  முன்பு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

தற்போது இத்தொட்டி ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது. இத்தொட்டி மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன், மேல்நிலை தொட்டி உறுதித்தன்மையை இழந்ததால் ஊராட்சி நிர்வாகம் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதை நிறுத்தி விட்டது. தொட்டி சிதிலமடைந்து உள்ளதால், எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது. குழந்தைகள் தொட்டி அருகே விளையாடி வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுசம்மந்தமாக, மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு, அசம்பாவிதம் நிகழும் முன்பு, தொட்டியை இடித்து புதியதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: