ஆடுகளம் செயலியை வீரர்கள் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி, மே 13: வீரரகள், விளையாட்டு செய்திகளை அறிய மற்றும் போட்டிகளில் பங்கேற்க, ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு வீரர்கள் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், இனி வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு செயலியான TNSPORTS ஆடுகளம் பதிவேற்றம் செய்து பயன்படுத்திட வேண்டும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரர்களின் இமெயில், முகவரி, கைப்பேசி எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விபரங்களை குறிப்பிட்டு, பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வருங்காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே டிஜி லாக்கர் மூலம் வழங்கப்பட உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மக்கள் அனைவரும் உடனடியாக ஆடுகளம் செயலியை, வருகிற 15ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: