கிருஷ்ணகிரி, மே 13: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்த திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது: தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வீடு வழங்கும் பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.