ஆவடியில் ரூ.28.53 கோடியில் அரசு மருத்துவமனை புதிய கட்டிட பணி: அமைச்சர்கள் வேலு, நாசர் ஆய்வு

ஆவடி: ஆவடியில் ரூ.28.53 கோடியில் அரசு மருத்துவமனை  புதிய கட்டட பணிகளை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆவடி புதிய ராணுவ சாலையில், அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இதற்காக மருத்துவமனையை மேம்படுத்த, புதிதாக மூன்று மாடி கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ், ரூ.28.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடந்தாண்டு மே 7ம் தேதி கட்டுமானப் பணிகள் துவங்கின. இந்த பணிகளை 15 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. தற்போது ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில், 54 ஆயிரத்து 235 சதுர அடி பரப்பில் தரைதளம் மற்றும் மூன்று மாடிகள் அமைக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதனை நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட 45 சுங்கச் சாவடிகள் உள்ளது. இங்கு உரிய விதி முறைகள் பின்பற்றபடுகிறதா என தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் தமிழ்நாடு முழுவதும், ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும்,  மாநில அரசே சுங்கச் சவடிகளை பராமரித்து, அதில் வரும் தொகையை சாலை அமைத்த நிறுவனங்களுக்கு மாதம் மாதம் அளிக்க தீர்மானித்துள்ளோம். விவசாய நிலங்களில் சாலைகள் அமைக்கப்படுவதாக கேள்விகள் எழுகின்றது.

விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்படாத வகையில், சாலைகளை நேர் கோட்டில் அமைக்க உள்ளோம். இதில்,  விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் சாலைகள்அமைக்கப்படும். மேலும், பாடி முதல் திருநின்றவூர் வரையிலான சென்னையிலிருந்து திருப்பதி சாலை விரிவாக்கப் பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு துறை  ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த அறிக்கைக்கு பிறகு விரைவில் அதற்கான பணிகளை தமிழக அரசு சார்பில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: