கடலூர், மே 12: வங்கக்கடலில் தீவிர புயலாக நிலைக்கொண்டிருந்த ‘அசானி’ புயலாக வலுவிழந்தது. இதையடுத்து ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே அசானி புயல் நிலைக்கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்கும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அசானி புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் கடலூரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நாள் முழுவதும் வெயிலை காண முடியவில்லை. மேலும் கடலூர் தேவனாம்பட்டினம், துறைமுகம், தாழங்குடா, உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதன் காரணமாக கடலூரில், மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.