திட்டக்குடி, மே 12: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (35). இவர்கள் இருவரும் சொந்த அலுவல் காரணமாக அரங்கூரிலிருந்து திட்டக்குடி நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். திட்டக்குடி டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்து போது, திட்டக்குடியில் இருந்து கீழ்ச்செருவாய் நோக்கி சென்ற ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் செல்வராஜ், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, ஆட்டோ ஓட்டுனர் ராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக மூன்று பேரையும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மொபட்டில் வந்த செல்வராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.