ஓசூர், மே 12: ஓசூர் அடுத்த மோரணபள்ளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இப்பகுதியில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை எடுத்து வரும் பணியிலும், உற்பத்தி செய்த பொருட்களை கொண்டுசெல்ல கன்டெய்னர் லாரிகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வடமாநிலத்தவர்கள் ஓட்டி வரும் கன்டெய்னர் லாரிகள், தாழ்வாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பி இருப்பது தெரியாமல் மோதி, தீவிபத்தில் சிக்குகிறது. தாழ்வாக செல்லும் இந்த மின்கம்பிகளை, இழுத்து கட்டி உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் பல முறை கோரிக்கை மனு வழங்கியும், மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.