சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், 35 மாணவர்களை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை சென்னையை சேர்ந்த எபினேஷ்(27) என்ற டிரைவர் ஓட்டினார். தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே சென்றபோது, திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் ஓட்டுநர் எபினேஷ் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்த்தார். அதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடுமாறு எச்சரித்தார்.