×

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி


அரியலூர், மே 11: அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் கிராமத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி துவக்கி வைத்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடைப்பராமரிப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளையும், கால்நடைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கால்நடை மருத்துவ முகாமினையும் பார்வையிட்டு, கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கலவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மானிய விலையில் தலா ரூ.1640 என ரூ.3,280க்கு தார்பாய்களும், ஒரு பயனாளிக்கு மானிய விலையில் ரூ.4480 கைத்தெளிப்பானும், 1 பயனாளிக்கு மானிய விலையில் ரூ.2060 உளுந்தும் என மொத்தம் 79 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சத்து 66 ஆயிரத்து 620 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இம்முகாமில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சந்திரசேகர், இணை இயக்குநர்கள் பழனிசாமி (வேளாண்), ஹமீதுஅலி (கால்நடை), கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் ஆனந்தன், உதவி இயக்குநர் சரண்யா, ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயாஇளையராஜா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Integrated ,
× RELATED எளாவூர் ஒருங்கிணைந்த...