ராஜபாளையம், ஏப். 28: ராஜபாளையம் காமராஜர் நகரில் தனியார் ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வேலை முடிந்ததும், அலுவலகத்தை அடைத்து விட்டு பணியாளர்கள் சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கிருந்த இன்வெட்டர் பேட்டரியில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் அறை முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து காற்றின் வேகத்தில் கட்டிடம் முழுவதும் தீ பிடிக்க துவங்கியது.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து நகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீயை அணைத்தனர். மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் தீ பரவாமல் தடுத்தனர்.இருப்பினும் இந்த தீ விபத்தில், ரத்த பரிசோதனை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், ரத்த பரிசோதனை இயந்திரங்கள், நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. விபத்து குறித்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.