வெள்ளியணை அருகே பரிதாபம் குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

கரூர், ஏப். 26: கருர் மாவட்டம் வெள்ளியணை அருகே குளத்தில் முழ்கி சிறுவன் பலியானான். திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(36). இவரின் மகன் கார்த்தி(14). இவர், திண்டுக்கல் மாவட்டம் பாடியூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கரூர் மாவட்டம் உடையாபட்டியை சேர்ந்த தாய் மாமன் முருகேசன் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், முருகேசன், கார்த்தியை அழைத்துக் கொண்டு, அவரின் மாமனார் ஊரான தாளியபட்டிக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை 11மணியளவில் கார்த்தி, குளிப்பதற்காக நண்பர்களுடன் நேற்று அந்த பகுதியில் உள்ள குளத்துக்கு சென்றார். கார்த்தி மட்டும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீச்சல் தெரியாததால் நீரில் முழ்கினார். உடனிருந்தவர்கள் கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் வந்து குளத்தில் மூழ்கிய கார்த்தியை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து, கார்த்தியின் உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: