திருப்பூர், ஏப் 22: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இதுவரை பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.1.58 கோடியும், அரசின் பங்களிப்பாக ரூ.3.32 கோடியும் என மொத்தம் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருவிக நகர் மற்றும் எல்ஐசி காலனி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் தங்களது 3ல் ஒரு பங்கு தொகையாக ரூ.20 லட்சம் மதிப்பிலான காசோலையை துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர். இதன் மூலம் திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா கல்லூர் ரோடு திருவிகநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்ப, உயர்நிலைப்பள்ளி (மாஸ்கோநகர்) விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.