ஈரோடு, ஏப். 21: சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
இவ்விருது பெற 15 வயது முதல் 35 வயதிக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. இணையதளம் மூலம் மே மாதம் 10ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in அல்லது //www.sdat.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் உள்ளது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.