ஈரோடு, ஏப். 21: ஈரோட்டில் பூஜாரிகள் பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
இதில், தமிழக அரசு அனைத்து கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானம் இல்லாத கோயில்களில் பணியாற்றும் பூஜாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கோயில் மானிய பூமிகளை பூஜாரிகள் வீடு கட்ட இலவச பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பேரமைப்பின் நிர்வாகிகள் நவநீதன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.