தொழில் போட்டியில் நண்பனை பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது
திருச்சி, ஏப்.21: தொழில் போட்டியில் நண்பனை பாட்டிலால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காஜாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் (31), வடக்கு ஆண்டார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (31), ஜீவாநகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் மணி (26). நண்பர்களான 3 பேரும் சந்துக்கடை பகுதியில் நகை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களிடையே தொழில் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் கார்த்திக் அவர்களிடமிருந்து பிரிந்து விட்டார். கடந்த 17ம் தேதி கார்த்திக் நண்பர்களை போனில் அழைத்து தொழில் ரீதியாக பேச வேண்டும் என கூறினார். இதையடுத்து 2 பேரும் புறப்பட்டு வந்தனர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் மணி, மாணிக்கம் ஆகியோர் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து கார்த்திக்கை தாக்கினர். இதில் தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து மணி, மாணிக்கத்தை கைது செய்தனர்.