தர்மபுரி, ஏப்.20: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு, தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக சட்டமன்றப் பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின், 2021 -2022ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனை யொட்டி தர்மபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை -600 009 என்ற முகவரிக்கு, வரும் மே 10ம் தேதிக்குள் அனுப்பலாம். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.