சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தர்மபுரியில் விரைவில் கூடுகிறது

தர்மபுரி, ஏப்.20: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு, தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக சட்டமன்றப் பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின், 2021 -2022ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது.  இதனை யொட்டி தர்மபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை -600 009 என்ற முகவரிக்கு, வரும் மே 10ம் தேதிக்குள் அனுப்பலாம். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் இருக்கக்கூடாது. சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்.

இதுகுறித்து மனுதாரர்களுக்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். வரும் 10ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: