அம்மா உணவகம், சமூக நலத்துறை, குழந்தை பாதுகாப்பு துறையிடம் ஒப்படைப்பு அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் 3,589 பொங்கல் பரிசு தொகுப்பு

வேலூர், பிப்.18:வேலூர் மாவட்டத்தில் 3,589 பொங்கல் பரிசு தொகுப்பை அம்மா உணவகம், சமூக நலத்துறை குழந்தை பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, நெய், முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் 13ம்தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பி வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏராளமான பொங்கல் பரிசு தொகுப்பு மீதமுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்டது போக கையிருப்பில் உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொருட்களின் தரத்தினை உறுதி செய்த பின்னர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைத்து பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 375 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வந்தது. இதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 786 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, கையிருப்பில் 3,589 பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பை அம்மா உணவகம், சமூக நலத்துறை, குழந்தை பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories: