குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சமரசம் வேலூர் சைதாப்பேட்டையில் படம் உள்ளது

வேலூர், பிப்.17:வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ேவலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை பிடிசி ரோட்டில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பைப்லைன் உடைந்ததால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக உள்ளூர் குடிநீர் ஆதாரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இப்பகுதியில் சுமார் ஒரு மாதமாக சீரான குடிநீர் வழங்கவில்லையாம். இதுகுறித்து மாநகராட்சியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை பிடிசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: