திருச்சி, ஜன. 29: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணி வகுப்பில் பங்கேற்க, தமிழக அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசால் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து சென்னை கடற்கரையில் தமிழக அரசு சார்பில் நடக்கும் குடியரசு தினவிழாவில் இடம்பெறும் தமிழ்நாடு ஊர்தி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள், மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோயில் ஆகியவை அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்தது.