திருவாரூர் அருகே இடத்தகராறில் பெண் மீது வெந்நீரை ஊற்றிய உறவினர் கைது

திருவாரூர், ஜன.29: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இடத்தகராறில் பெண் மீது வெந்நீரை ஊற்றிய வழக்கில் உறவினர் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் கணவர் மற்றும் தாயார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா வேம்பனூர் கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன் மகன் ஜெய்சங்கர் (40), மின் வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி செந்தில்குமார் (35), டிரைவர் வேலை பார்த்து வருகிறார். அண்ணன், தம்பி இருவருக்கும் திருமணமாகி ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்தில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் இட பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அடிக்கடி ஜெய்சங்கர் மனைவி பத்மாவதி (32), செந்தில்குமார் மனைவி அருள்செல்வி (30) இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த முன் விரோதம் காரணமாக கடந்த 25ம்தேதி வீட்டின் கொல்லைப் புறத்தில் நின்று கொண்டிருந்த அருள்செல்வி மீது பத்மாவதி கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் முதுகு, இடுப்பு, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த அருள்செல்வி சிகிச்சைக்காக குடவாசல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் குடவாசல் போலீசார் பத்மாவதி மற்றும் அவரது கணவர் ஜெய்சங்கர் (40), பத்மாவதியின் தாய் ஜீவா (60) ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து பத்மாவதியை நேற்று முன்தினம் இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜெய்சங்கர் மற்றும் அவரது மாமியார் ஜீவா இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: