நாமக்கல்லில் தமிழ்நாடு ஓட்டலை சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு

நாமக்கல், ஜன. 29: நாமக்கல் அருகே ராசாம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலை, சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓட்டலில் உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி அறைகள் அனைத்தையும் திறந்து பார்வையிட்டார். தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் நகராட்சி பகுதிக்கு மிக அருகில் உள்ள இந்த தமிழ்நாடு ஓட்டல், கட்டடம் நல்ல நிலையில் இருந்த போதும், பராமரிப்பின்றி இருந்ததை பார்வையிட்டு, உடனடியாக தங்கும் அறைகள் மற்றும் உணவு விடுதியை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு உடனடியாக அனுப்புமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தமிழ்நாடு ஓட்டல், கடந்த 2000ம் ஆண்டில் 1.96 ஏக்கர் பரப்பளவில், 8 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்டது. இந்த ஓட்டலில் 16 அறைகளும், ஒரு உணவகமும் அமைந்துள்ளன. கட்டப்பட்டது முதல் 4 ஆண்டுகள் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை காலம் முடிந்தவுடன், 2004ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அரசு நிர்ணயம் செய்த வாடகை படி, நாமக்கல் அரசு மகளிர் ஐடிஐ செயல்பட அனுமதிக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. கடந்த 2016ம் ஆண்டு மகளிர் ஐடிஐ அவ்விடத்தை விட்டு சென்ற பிறகு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது, நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், ஏற்காடு தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் பிரபுதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: