சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பகுதி ரேஷன் கடையில் அமைச்சர் ஆய்வு

ஈரோடு,ஜன.29: சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள ரேஷன் கடையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபாளையம், பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து பசுவபட்டி ஊராட்சியில் செயல்பட்டுவரும் கால்நடை கிளை மருத்துவமனையிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் பசுவபட்டி, எட்டாம் பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமப்பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதுகுறித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:முதல்வரின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செயல்படுத்திட அவர்களைநேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் அடிப்படைத் தேவைகளான சாலை, குடிநீர், மின்சாரம் மற்றும் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: