பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் 6 மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஜன.29: பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் 6 மாதமாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்க வேண்டும் என மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் தண்டுமாநகர்,  ஆத்துப்பாக்கம், அரியபாக்கம், தண்டலம்,  வண்ணாங்குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவ - மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் அனைவரும் வியாபாரம், வேலை சம்மந்தமாகவும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல இருசக்கர வாகனங்கள், பஸ், வேன் ஆகிய வாகனங்களில் பெரியபாளையம் வருகின்றனர்.

பின்னர், அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, செங்குன்றம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள். வேலை நிமிர்த்தமாக வெளியூர்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் பெரியபாளையம் வந்து வீடு திரும்புபவர்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படும். இதனால், செயின் பறிப்பு, திருட்டு போன்றவைகளும் நடைபெற்றது. மேலும், அங்குள்ள கடைகளிலும் திருட்டு நடந்தது. இதை தவிர்க்க  பெரியபாளையம் மும்முனை சந்திப்பின் மையப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் அப்போதைய எம்.பி (திமுக) ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹5 லட்சத்தை ஒதுக்கினார். பின்னர், 8 விளக்குகள் கொண்ட உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த உயர்கோபுர மின்விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த உயர்கோபுர மின்விளக்கின் அடிப்பகுதி உள்ள சிமென்ட் தளம் வாகனங்கள் மோதி சேதமடைந்துள்ளது. இதனால், இந்த மின்விளக்கு எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது.  எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கையும், அதன் அடிப்பகுதி சிமென்ட் தளத்தையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வழிப்பறி அச்சம்

அப்பகுதி மக்கள் கூறியதாவது, `உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் அம்மன் கோயிலுக்கு செல்வோரிடம் இரவில் நகை திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. மின்விளக்கு எரியாதது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயர்கோபுர மின்விளக்கு கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்குள் இதை எரிய வைத்து சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: