கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 82 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் இளநிலைவேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக்கும் நோக்கில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ₹1 லட்சம் வீதம் 5 பயனாளிகளுக்கு ₹5 லட்சம் வழங்க நிதி இலக்கீடு பெறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரிகள் தங்களின் தகுதிக்கேற்ப இந்த திட்டத்தில் இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், காளான் உற்பத்தி செய்தல், பசுமைக்குடில் அமைத்தில், இயந்திர வாடகை மையம் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், அக்ரி கிளினிக் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண் விளை பொருட்கள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர வேளாண் தொடர்பான திட்டங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.