சேலம்: சேலத்தில் கொலை மிரட்டல் விடுத்துவரும் திருநங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதியில் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் சிலர், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் ஆண்களை மடக்கி, பணம் பறித்து செல்வதாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர போலீசார், திருநங்கைகளை அழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். இதுதொடர்பாக புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 5 ரோடு எஸ்பிஐ காலனியில் திருநங்கைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு திருநங்கைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திருநங்கைகளில் ஒரு தரப்பினர், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அப்போது, தங்களை தாக்கிய திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.