மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறைச் சுற்றிப்பார்க்க, குருவாயூரைச் சேர்ந்த வினோத் கண்ணா (47) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் நேற்று முன்தினம் காரில் வந்தனர். சூர்யநெல்லியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அன்று மாலை 5.30 மணி அளவில் மூணாறுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
லாக்காடு எஸ்டேட் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார், தேயிலை தோட்டத்தில் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வினோத் கண்ணா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், காரில் இருந்த அவரது நண்பர்கள் 4 பேர் காயமடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மூணாறு டாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தேவிகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.