திருப்பூர்: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், அரசியல் கட்சியினர் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வருகிற பிப்ரவரி மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 4ம் தேதி மனு தாக்குதலுக்கு இறுதி நாள். வேட்பு மனுக்கள் 5ம் தேதி ஆய்வு செய்யப்படுகின்றன. 7ம் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல், 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் திருப்பூரில் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், செலவு கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்தும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினர் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் உள்ளிட்டவை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.